சென்னை: “மின்னல் முரளி’ படத்துக்கும் ‘வீரன்’ படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என நடிகர் ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார்.
‘மரகத நாணயம்’ பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்திருக்கும் ‘வீரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ஆதி, “ஜூன் 2-ம் ‘வீரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று பார்க்கலாம். எந்த முகச் சுழிப்பு காட்சிகளும் இதில் இருக்காது. நம்பி போகலாம். நான் இரண்டு வருடங்கள் படிப்பதற்காக ப்ரேக் எடுத்தேன். நிறைய கற்றுகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதால் 2 ஆண்டுகள் நேரம் எடுத்து பிஹெச்டி படித்துவிட்டு வந்துள்ளேன்.
இந்தப் படம் நாட்டார் தெய்வங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது நம் மண் சார்ந்த சூப்பர் ஹீரோ படம். ஜாலியான படமாக இது இருக்கும். ‘மின்னல் முரளி’ படத்திற்கும் இந்தப் படத்திற்கும் சம்மந்தம் இருக்காது. அடுத்து வரலாறு தொடர்பான படங்களில் நடிக்கவும் இருக்கிறேன். நான் நடிக்கும் படங்களாக இருந்தாலும், சரி, இயக்கும் படங்களாக இருந்தாலும் சரி, புது முகங்கள் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இந்தப் படத்திலும் நிறைய யூடியூபர்கள் நடித்துள்ளனர். நான் படம் தயாரித்தாலும் புது முகங்களுக்கு அந்தப்படம் அடித்தளமாக இருக்கும்” என்றார்.