‘சார்பட்டா 2’ எப்போது? - ஆர்யா கொடுத்த அப்டேட்

By செய்திப்பிரிவு

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘சார்பட்டா 2’ படம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாக நேற்று கோவையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆர்யா தெரிவித்துள்ளார்.

‘விருமன்’ படத்திற்கு பிறகு முத்தையா இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் ஆர்யா. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சித்தி இட்னானி நாயகியாக நடிக்கிறார். மேலும், பிரபு, பாக்யராஜ், சிங்கம்புலி, நரேன், தமிழ், மதுசூதன ராவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் புரொமோஷனுக்காக நேற்று கோவையில் ஆர்யா, சித்தி இட்னானி இருவரும் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

செய்தியாளர்களிடம் ஆர்யா பேசியவதாவது:

சமூகநல்லிணக்கம் இல்லாத இந்த சூழலில் ’அல்லாவும் அய்யனாரும் ஒன்று’ என்பது வசனங்கள் கண்டிப்பாக தேவை என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன். படத்திலும் அதற்கான காரணங்களை இயக்குநர் வைத்திருக்கிறார். பாட்ஷா என்ற தலைப்புக்கும் ரஜினிக்கும் சம்பந்தம் இல்லை. அவரது பாட்ஷா படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களின் உற்சாகத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

கிராமத்து ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. அதனை முத்தையாவிடம் சொன்னேன். அப்போதுதான் இப்படத்தின் கதையை அவர் என்னிடம் சொன்னார். அடுத்ததாக மனு ஆனந்த் இயக்கத்தில் ‘மிஸ்டர் எக்ஸ்’ என்று ஒரு படம் நடிக்கிறேன். அதற்குப் பிறகு ‘சார்பட்டா 2’ இந்த ஆண்டு இறுதியில் தொடங்குகிறது. தற்போது கதை உருவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு ஆர்யா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE