கோவை: நல்லிணக்கம் இல்லாத சூழல் உருவாகி வரும் சமயத்தில், 'அல்லாவும் அய்யனாரும் ஒண்ணு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு' என்ற வசனம் தேவை என நினைக்கிறேன் என திரைப்பட நடிகர் ஆர்யா கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திரைப்பட இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள, 'காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தில் நடித்த நடிகர் ஆர்யா, நடிகை சித்தி இத்னானி ஆகியோர் கோவையில் இன்று (மே 28) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் ஆர்யா கூறியதாவது: ''மண், நன்றி, குடும்பம் என பல்வேறு விஷயங்களை முத்தையா அவர் பாணியில் கூறியிருக்கிறார். இது ஒரு கமெர்சியல் பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படம். படத்தில் வைக்கபட்டுளள 'அல்லாவும் அய்யனாரும் ஒண்ணு அதை அறியாதவர்கள் வாயில் மண்ணு' என்ற வசனம் வருகிறது. நல்லிணம் இல்லாத சூழல் உருவாகி வரும் சமயத்தில், இதுபோன்ற வசனங்கள் தேவை என நான் நினைக்கின்றேன். படத்தில் அந்த வசனம் வைத்ததற்கான காட்சிகள் இருக்கும்.
இப்படத்தில் இடம்பெறும் நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான போஸ்டர் மற்றும் பாட்டு ஆகியவை உற்சாகத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கும், அதற்கும் தொடர்பு இல்லை. எனக்கு கிராமத்தில் ஆக்சன் போன்ற திரைபடம் நடிக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை. அதனால் தான் இயக்குநர் முத்தையாவிடம் கேட்டு கொண்டதால் தான் இந்த கதை தனக்காக உருவாக்கப்பட்டது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் இசை இப்படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. கிராமத்து படங்கள் நான் நடிக்காதது ஃபேன் இந்தியா படம் இல்லை என்பதற்காக இல்லை.
காந்தாரா படம் கூட கிராமத்தில் தான் எடுத்தார்கள். பேன் இந்தியா என்பது சப்ஜெக்ட் தான். திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் போது பல மொழிகளில் மொழிபெயர்க்கிறார்கள், அப்போது அதில் கிடைக்கும் வரைவேற்பை பொறுத்து அது பேன் இந்தியா படமா என முடிவு செய்யப்படுகிறது. அடுத்து மிஸ்டர் எக்ஸ் என்ற திரைப்படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். சார்பட்டா 2 திரைப்படத்துக்கான கதை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடப்பாண்டு இறுதியில் படபிடிப்பு தொடங்கும். ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணிதான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகை சித்தி இத்னானி கூறும்போது, ''இத்திரைப்படத்தில் தமிழ்ச்செல்வி என்ற கனமான, முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிகர்கள் சிலம்பரசன், ஆர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தது பெருமைக்குரியது,'' என்றார்.