5 நாட்களில் திருமணம் - கார் விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த் 

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: வரும் ஜூன் 2ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கியுள்ளார். லேசான காயங்களுடன் தப்பிய அவரை பொதுமக்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்பவர் சர்வானந்த். தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு கடந்த ஆண்டு வெளியான ‘கணம்’ படமும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. கடந்த மே மாதம் சர்வானந்த்துக்கு அவரது காதலி ரக்ஷிதா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஜூன் 3ஆம் தேதி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

இந்த நிலையில் இன்று (மே 28) காலை நடிகர் சர்வானந்த் கார் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே வந்து கொண்டிருந்தபோது சர்வானந்தின் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் ஓரத்தில் கவிழ்ந்துள்ளது. இதில் காருக்குள் இருந்த சர்வானந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு முதலுதவிக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சர்வானந்த் தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. இன்னும் 5 நாட்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE