“தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர்” - பிரதமர் மோடிக்கு இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிறுவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. இதையடுத்து நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவும் நிகழ்வு நடைபெற்றது. செங்கோலுக்கு முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு, திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீனங்கள் முன்னிலையில் வேத மந்திரங்கள் ஓதி, செங்கோலுக்கு புனித நீர் தெளித்து மலர் தூவி மரியாதை செய்தனர். அப்போது, புனித செங்கோல் முன்பாக பிரதமர் நரேந்திர மோடி விழுந்து வணங்கினார். பின்னர் புனித செங்கோலை கைகளில் ஏந்தியவாறு நாடாளுமன்ற மக்களவைக்குள் சென்ற பிரதமர் மோடி, அங்கு சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவினார்.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: "தமிழ்ச் செம்மொழிக்கு மத்திய அரசின் கட்டிடம் தந்தீர். இன்று இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் சங்ககாலம் போற்றிய நீதியின் அடையாளம். செங்கோலை போற்றும் பிரதமர் மோடி அவர்களே, உலகத்திற்கு செங்கோல் வழியாக தாய்மொழியை போற்றும் தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர். பெரிய விசயம்!" இவ்வாறு சீனு ராமசாமி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE