அபுதாபி: ஓடிடி தளங்களின் வருகையை பல ஆண்டுகளுக்கு முன்பே தான் கணித்ததாகவும், ஆனால் அப்போது தம்முடைய கூற்றை திரைத்துறை ஏற்கவில்லை என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு இடையே வெளியானது. அப்போது திரைத்துறையில் யாரும் யோசிக்காத ஒரு திட்டத்தை கொண்டு வந்தார் கமல்ஹாசன். Direct-To-Home என்ற அந்த திட்டத்தின் மூலம் ரூ.1000 கட்டணம் செலுத்தி வீட்டிலேயே டிஷ் டிவி மூலம் ‘விஸ்வரூபம்’ படத்தை பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் எதிர்ப்பு காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் அபுதாபியில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: "மற்றவர்களுக்கு முன்பே ஓடிடி தளங்களின் வருகையை நான் முன்கூட்டியே கணித்துவிட்டேன். நாம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அனைவரிடமும் கூறினேன். ஆனால் அப்போது என்னுடைய கூற்றை திரைத்துறை ஏற்கவில்லை. ஆனால் அன்று நான் சொல்ல முயற்சித்த விஷயத்தை இன்று அனைவருமே புரிந்து கொண்டுள்ளனர். இப்போது, இந்திய ரசிகர்களுக்கு சர்வதேச சினிமா ரசனை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக உங்களிடம் இலக்கியத்தில் ஒரு எம்.ஏ டிகிரி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதனால் மட்டுமே நீங்கள் ஒரு மிகச்சிறந்த திரைக்கதை எழுத்தாளராகி விட முடியாது. இது ஒரு வித்தியாசமான கலை. ஷேக்ஸ்பியரே இப்போது இருந்தாலும் கூட திரைக்கதை எழுத சில பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொள்ள வேண்டும்.
நான் ஒரு சினிமா ரசிகன். நான் பார்க்க விரும்பும் படங்களைத் தான் நான் உருவாக்க விரும்புகிறேன். சிலநேரம் அவற்றில் நானே நடிக்கிறேன். அல்லது அவற்றில் நடிக்காமல் தயாரிக்க மட்டும் செய்கிறேன். இப்போது கூட இரண்டு படங்களை நான் தயாரித்து வருகிறேன். அவற்றுக்கு பணம் செலவழிப்பதை தவிர, அவற்றுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை." இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.