மலையாள சினிமாவில் ரூ.150 கோடி வசூலித்த முதல் படம்: டோவினோவின் ‘2018’ சாதனை!

By செய்திப்பிரிவு

மலையாள திரையுலகில் ரூ.150 கோடியை வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது டோவினோ தாமஸின் ‘2018’. படம் வெளியாகி 23 நாட்களைக் கடந்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘2018’ பாக்ஸ் ஆபீஸிலும் ‘மாஸ்’ காட்டி வருகிறது. இன்றும் கேரளாவில் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 11 நாட்களில் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இதன்மூலம் மலையாள சினிமாவில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலை குவித்த படம் என்ற பெருமையை ‘2018’ பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ திரைப்படம் 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போது, படம் வெளியாகி 23 நாட்கள் கடந்த நிலையில், இதுவரை உலகம் முழுவதும் படம் ரூ.150 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் மலையாள சினிமாவின் முதல் ரூ.150 கோடி வசூலித்த படம் என்ற பெருமையை ‘2018’ பெற்றுள்ளது. இதனிடையே, நேற்று (மே26) படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. அந்த வகையில் தெலுங்கில் படம் ரூ.1.1 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > 2018 (Everyone is a Hero) திரைப் பார்வை: பேரிடரில் துளிர்க்கும் பேரன்பும், அட்டகாசமான திரை அனுபவமும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE