திடீர் உடல்நலக்குறைவு - ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநர் சுதிப்டோ சென் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

மும்பை: சர்ச்சைக்கு மத்தியில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையைக் கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.

தென்னிந்தியாவில் சோபிக்காத இப்படம் இந்தி பேசும் மாநிலங்களில் வரவேற்பை பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.200 கோடியை கடந்து வசூலித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று (மே 26) ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் இயக்குநர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படத்தை விளம்பரம் செய்வதற்காக நாடு முழுவதும் தொடர்ந்து பயணம் செய்ததே அவரது திடீர் உடல்நலக்குறைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. அவர் மீண்டும் குணமடையும் வரை படத்தின் புரொமோஷன் பணிகள் அனைத்து நகரங்களிலும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE