சென்னை: ’பிசாசு 2’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதிக்காக ஒரு கதை எழுதி வருவதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள படம் 'பிசாசு 2' படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆண்ட்ரியாவுடன் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் விஜய் சேதுபதியும் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியாகிவிட்டாலும், படத்தின் ரிலீஸ் இன்னும் உறுதியாகவில்லை.
இதற்கிடையில் மிஷ்கின் லோகேஷ் கனகராஜின் ‘லியோ’ படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார். இதுதவிர சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்திலும் பிரதான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கப்போவதை மிஷ்கின் உறுதி செய்துள்ளார். விஜய் சேதுபதிக்காக ஒரு கதை ஒன்றை எழுதி வருவதாகவும், அது நிறைவடைந்ததும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.