‘டாடா’ இயக்குநருடன் கைகோக்கும் துருவ் விக்ரம்

By செய்திப்பிரிவு

நடிகர் துருவ் விக்ரம் அடுத்ததாக ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் பாபுவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.

இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் ‘டாடா’. உறவுச் சிக்கல்களை பேசிய இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கணேஷ் பாபு இயக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகர் துருவ் விக்ரம் ஒப்புந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருவ் விக்ரம் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டில் ‘மகான்’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் 2 வருடங்களாக எந்தப் படமும் வெளியாகவில்லை. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஸ்போர்ஸ் - ட்ராமா படம் ஒன்றிலும் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு பிறகு கணேஷ்பாபு இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.

விஷால் பட அப்டேட்: ஹரி இயக்கத்தில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால். இவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விஷாலின் 34-வது படமான இது வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணியாற்ற உள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE