முன்னணி தெலுங்கு நடிகரால் துன்புறுத்தலா? - ஹன்சிகா மறுப்பு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: முன்னணி தெலுங்கு நடிகர்களில் ஒருவர் தன்னை துன்புறுத்தியதாகவும், அவருக்கு தான் தக்க பதிலடி கொடுத்துவிட்டதாகவும் வெளியான செய்திக்கு நடிகை ஹன்சிகா மோத்வானி ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. தமிழ், தெலுங்கு திரைத்திறையில் விஜய், சூர்யா, தனுஷ், ஜூனியர் என்டிஆர், ரவி தேஜா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சில ஆண்டுகளாக நடிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் சமீபத்தில் தனது நீண்டகால நண்பரான சோஹேல் கட்டூரியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில் சினிமா இணையதளம் ஒன்றில் ஹன்சிகாவைப் பற்றிய செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில், தான் நடிக்க வந்த புதிதில் அப்போது தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக இருந்த ஒருவர், தொடர்ந்து தன்னை டேட்டிங்குக்கு அழைத்து, துன்புறுத்தலில் ஈடுபட்டதாக ஹன்சிகா கூறியதாக ஒரு தகவல் இடம்பெற்றிருந்தது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் கடும் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் யார் அந்த நடிகர் என்று விவாதித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்தச் செய்திக்கு நடிகை ஹன்சிகா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், ‘இப்படி நான் சொல்லவே இல்லை. இது போன்ற குப்பைகளை பதிப்பிப்பதை நிறுத்துங்கள்’ என்று கூறியுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், ‘தவறான செய்திகளை எடுக்கும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ளுமாறு பதிப்பகங்களை கேட்டுக் கொள்கிறேன். இப்படி ஒரு தகவலை நான் சொல்லவே இல்லை. கண்ணை மூடிக் கொண்டு பப்ளிஷ் செய்வதற்கு முன் உண்மைத் தன்மையை தெரிந்து கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE