கார் விபத்தில் பிரபல இந்தி சீரியல் நடிகை வைபவி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

மும்பை: ‘சாராபாய் vs சாராபாய்’ இந்தி சீரியல் மூலம் பிரபலமான டிவி நடிகை வைபவி உபாத்யாய் கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 32.

2004 முதல் 2006 வரை ஸ்டார் ஒன் சேனலில் ஒளிபரப்பான தொடர் ‘சாராபாய் vs சாராபாய்’. இரண்டு சீசன்களாக ஒளிபரப்பான இத்தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் வைபவி உபாத்யாய். இந்தத் தொடருக்கு பிறகு வைபவி பல்வேறு சீரியல்களிலும், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று (மே 23) அன்று வைபவி தனது வருங்கால கணவருடன் இமாச்சல் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்தது. இதில் வைபவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வருங்கால கணவரின் நிலை குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தற்போது வைபவியின் குடும்பத்தினர் அவரது உடலை மும்பைக்கு கொண்டு சென்று அங்கு அவரது இறுதிச் சடங்குகளை நடத்த இருக்கின்றனர். வைபவியின் மறைவுக்கு அவருடன் நடித்த சக நடிகர்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE