வட சென்னையின் அடையாளமான அகஸ்தியா தியேட்டரை வாங்குகிறாரா நயன்தாரா? - திரையரங்க நிர்வாகம் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: வட சென்னையில் அமைந்திருக்கும் அகஸ்தியா திரையரங்கை நடிகை நயன்தாரா வாங்கவிருப்பதாக வெளியான தகவல் குறித்து திரையரங்க நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக தண்டையார்பேட்டையில் இருக்கும் அகஸ்தியா திரையரங்கத்தை நடிகை நயன்தாரா வாங்க இருப்பதாக சமூக ஊடகங்களில் சில நாட்களாக செய்தி ஒன்று பரவி வந்தது. 1967-ல் திறக்கப்பட்ட இந்தத் திரையரங்கில் எம்ஜிஆர் - சிவாஜி கணேசன் திரைப்படங்கள், ரஜினிகாந்தின் முதல் படமான 'அபூர்வ ராகங்கள்' ஆரம்பித்து எண்ணற்ற படங்கள், விஜய், அஜித் திரைப்படங்கள் எனப் பலதரப்பட்ட படங்களும் வெளியாகியுள்ளன.

கரோனா காலகட்டத்தில் மற்ற திரையரங்குகளைப் போலவே அகஸ்தியா திரையரங்கமும் கடும் நெருக்கடியை சந்தித்தது. அதிலிருந்து மீளமுடியாத நிர்வாகம் திரையரங்கை மூடியது.

இந்த நிலையில், அகஸ்தியா திரையரங்கை நடிகை நயன்தாராவும், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் வாங்கி அந்த இடத்தில் ஒரு மல்டிப்ளெக்ஸ் கட்ட இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ள அக்ஸ்தியா திரையரங்க நிர்வாகம், அகஸ்தியா திரையரங்கம் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருவதால் அதனை யாருக்கும் விற்க முடியாது என்றும், நயன்தாரா இந்த இடத்தை வாங்கிவிட்டார் என்று வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE