கோவை: “ஆயிரத்தில் ஒருவன் 2 மிகப் பெரிய பட்ஜெட் கொண்ட படமாக இருக்கும். படத்தின் ஸ்கிரிப்டை கேட்க ஆர்வமாக இருக்கிறேன்” என ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், “கோவையில் என்னுடைய முதல் கான்சர்ட் நடக்க இருக்கிறது. கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘வெயில்’ படத்தின் மூலம் என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது. தற்போது 100-வது படத்தை எட்ட இருக்கும் நிலையில் முதல் கான்சர்டை நடத்த திட்டமிட்டுள்ளேன். கோவையில் என்னுடைய முதல் கான்சர்ட் நடத்துவது மகிழ்ச்சி” என்றார்.
அவரிடம் ‘பாரம்பரிய இசைக் கருவிகள் பயன்பாடுகள் குறித்து கேட்டதற்கு, “கதைதான் இசைக் கருவிகளின் பயன்பாட்டை முடிவு செய்யும். ‘ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரியான படங்களுக்கு இசையமைக்கும்போது அதற்கான இசைக் கருவிகளை பயன்படுத்துவோம். கதைதான் அதை தீர்மானிக்கிறது என நினைக்கிறேன். ‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக பேசியிருக்கிறார்கள். அது மிகப் பெரிய பட்ஜெட். அது நடந்தால் எனக்கும் சந்தோஷம். நானும் அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். செல்வராகவனின் அடுத்த வெர்ஷன் எப்படி இருக்கும் என்பதையும், அதற்கான ஸ்கிரிப்டையும் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்” என்றார்.