“நான் முன்பே விளக்கமளித்துவிட்டேன்” - அனுராக் காஷ்யப்புக்கு விக்ரம் பதில்

By செய்திப்பிரிவு

தன்னுடைய ‘கென்னடி’ படத்தில் நடிக்க விக்ரமுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றும் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு நடிகர் விக்ரம் விளக்கமளித்துள்ளார்.

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றிருக்கிறார். அவருடைய ‘கென்னடி’ திரைப்படம் கேன்ஸில் திரையிடப்பட்டது. அந்த திரையிடலுக்குப்பிறகு நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் பேசிய படத்தின் இயக்குநர் அனுராக் காஷ்யப், “இந்தப்படத்தில் நடிக்க என்னுடைய தேர்வாக இருந்தவர் நடிகர் விக்ரம். காரணம் அவரது ஒரிஜினல் பெயர் ‘கென்னடி’. ஆனால் அவர் என் அழைப்புக்கு எந்த பதிலும் அளிக்காததால் வேறொருவரை தேர்ந்தெடுக்க வேண்டியதாயிற்று” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அனுராக் காஷ்யப்பின் இந்த குற்றச்சாட்டுக்கு விக்ரம் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புடைய அனுராக் காஷ்யப், சமூக ஊடகங்களில் உள்ள நம் நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகளுக்காக ஒருவருடத்திற்கு முன் நடந்த உரையாடலை மீளாய்வு செய்கிறேன். இந்தப்படத்திற்காக நீங்கள் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், அதற்கு நான் பதிலளிக்கவில்லை என்றும் நண்பர் ஒருவர் மூலமாக அறிந்த உடன் உங்களை தொடர்புகொண்டு எனக்கு உங்களுடைய எந்த மெயிலும், மெசேஜூம் வரவில்லை என தெரிவித்தேன். மேலும் நீங்கள் என்னை தொடர்பு கொண்ட மெயில் ஐடி மற்றும் தொடர்பு எண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மாற்றிவிட்டேன் என்றும் அது தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதையும் விளக்கமளித்தேன். அந்த தொலைபேசி உரையாடலில் நான் சொன்னது போல, உங்களின் ‘கென்னடி’ படத்திற்காக நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். காரணம் அது என்னுடைய பெயரை கொண்டிருப்பதால். அன்புடன் கென்னடி என்ற சீயான் விக்ரம்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE