கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே21’ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு காரணங்களாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பிரின்ஸ்’ படத்தின் தோல்விக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ‘மாவீரன்’ படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. அதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் ‘அயலான்’ இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்தியேகன் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ‘எஸ்கே21’ என அழைக்கப்படும் இப்படத்தில் சாய் பல்லவியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே 5-ம் தேதி பிரம்மாண்ட விழாவுடன் தொடங்கியது. ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கும் இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்தது. மொத்தம் 55 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் நடக்க இருப்பதால் அது தொடர்பான பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் நடைபெறுகின்றன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு பாதுகாப்பு, அதிகாரிகளால் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து படக்குழு சென்னை திரும்பியிருக்கிறது.