''வணிக வெற்றியையும், உணர்வு ரீதியிலான உறவுகளையும் பேசும் பாடல்கள்'' - ‘பிச்சைக்காரன் 2’ பாடலாசிரியர் அருண் பாரதி

By செய்திப்பிரிவு

“வணிக ரீதியிலான வெற்றிப் பாடல்களை கொடுக்கும் அதே நேரம், உணர்வு ரீதியிலான உறவுகளை எடுத்து சொல்லும் கதைக்களம் சார்ந்த பாடல்கள் எல்லா பாடலாசிரியர்களுக்கும் அமைந்து விடாது” என ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி இயக்கி, நடித்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ படம் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள படத்தின் பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன. இந்நிலையில் படம் குறித்து பாடலாசிரியர் அருண் பாரதி கூறுகையில், “பிச்சைக்காரன் 2 படத்தில் பணியாற்றியது மிகவும் நிறைவாக இருக்கிறது. வணிக ரீதியிலான வெற்றிப் பாடல்களை கொடுக்கும் அதே நேரம், உணர்வு ரீதியிலான உறவுகளை எடுத்து சொல்லும் கதைக்களம் சார்ந்த பாடல்கள் எல்லா பாடலாசிரியர்களுக்கும் அமைந்து விடாது. அந்த வகையில் எனக்கு அது அமைந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

எனது பாட்டுப்பயணத்தில் நிறைய வேகத் தடைகள் இல்லாமல் இலகுவாக நான் பயணம் செய்வதற்கான அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் விஜய் ஆண்டனிதான்.

தொடர்ந்து அவரோடு நான் பயணிப்பதால் என்ன மாதிரியான வரிகளை அவருக்கு எழுத வேண்டும் என்பதை நான் புரிந்து வைத்திருக்கிறேன். நான் என்ன மாதிரி எழுதுவேன் என்பதை அவரும் தெரிந்து வைத்திருக்கிற காரணத்தினால் எங்கள் பயணம் எளிமையாக இருப்பதாக கருதுகிறேன். வழக்கமாக விஜய் ஆண்டனிக்கு எழுதுவதை விட, இந்தப் படம் கூடுதல் உழைப்பை எடுத்துக் கொண்டது. அதற்கு காரணம் எந்த சமரசமும் இல்லாமல் பணியாற்றியதுதான். 'கோயில் சிலையே' பாடல் அண்ணன் தங்கைகளுக்கான ஒரு ஆன்தம் ஆக அமைந்திருக்கிறது. 'நானா புலுக்கு' பாடல் கமர்ஷியலாக மிகப்பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. 'கள்ளூறும் பூவே' என்ற மெல்லிசை பாடலும் அற்புதமாக வந்திருக்கிறது. மொத்தம் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து, “அஜித், ரஜினி இருவருக்குமே நான் பாடல் எழுதியதற்கு இயக்குநர் சிவா தான் மிக முக்கியமான காரணம். அவர் என் மீது வைத்த நம்பிக்கைதான் என் வாழ்வின் புதிய பக்கத்தை திறந்து வைத்தது. அவரது படங்கள் எல்லாமே படு மாஸாக இருக்கும். ஆனால் அவரோடு பழகிப் பார்த்தால் ஒரு குழந்தை போல இருப்பார். அவரோடு பாடல் எழுதுவது கல்லூரிக்கு சென்று வருவது போல உற்சாகமாக இருக்கும். இந்த நேரத்தில் இசையமைப்பாளர் இமானுக்கு நன்றி சொல்லவேண்டும். சிறு வயதிலேயே தன் தங்கையை இழந்த முகம் தெரியாத ஒரு அண்ணன் கோயில் சிலையே பாடலை பார்த்து விட்டு, என்னை பார்த்தே ஆக வேண்டும் என என் வீடு தேடி வந்து கட்டியணைக்கையில் என் தோள்களில் சிந்திய கண்ணீர் துளிதான் சமீபத்தில் எனக்கு கிடைத்த ஆகச்சிறந்த பாராட்டு” என்றார்.

திரைப்பாடல்கள் மற்றும் ஆல்பம் பாடல்கள் குறித்து பேசியவர், “என்னைப் பொறுத்த வரை எல்லா பாடல்களையும் சமமாகத்தான் பார்க்கிறேன். திரைப்பாடல் என்பது ஒரு சுவாரஸ்யமான நாவலில் தேவைப்படும் சூழலில் அந்த கதாபாத்திரங்களுக்காக எழுதுவது போல இருக்கும். ஆல்பம் பாடல் என்பது ஒரு சிறுகதைக்குள் சென்று எழுதுவது போல இருக்கும். சமீபத்தில் எனது “பொண்ணு பாக்க போறோம்”, “ஒரு சக்கரம் போலத்தான்” பார்வை போன்ற ஆல்பம் பாடல்கள் இந்த வகையை சேர்ந்ததுதான். திரைபாடல்களோடு சேர்ந்து தற்போது நிறைய ஆல்பம் பாடல்களும் எழுதி வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE