'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: "தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தமிழக மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனால் திரையரங்க உரிமையாளர்களே படத்தை திரையிடவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது" என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளவில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு பின்னர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைக்கப்படுகின்றனர் என்ற கருத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இத்திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், படத்தை வெளியிட மேற்கு வங்க மாநிலத்தில் தடை விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் திரையரங்க உரிமையாளர்கள் இத்திரைப்படத்தை திரையிடுவதில்லை என முடிவெடுத்தனர்.

இதற்கு எதிராக 'தி கேரளா ஸ்டோரி' திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இந்தப் படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக பதிலளிக்க மேற்கு வங்க மாநிலத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும், தமிழகத்தில் திரைப்படம் வெளியான திரையரங்குகள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் கடந்த மே 12-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில், திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழ்நாட்டில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை அரசு தடை செய்யவில்லை. மாநிலம் முழுவதும் மொத்த் 19 திரையரங்குகளில் அந்தப் படம் வெளியிடப்பட்டது. படம் வெளியான திரையரங்குகளுக்கு தமிழக காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அதேநேரம், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தமிழக மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனால் திரையரங்க உரிமையாளர்களே படத்தை திரையரங்குகளில் திரையிடவில்லை. படம் வெளியான திரையரங்குகளிலும் அந்த படத்தை தூக்கிவிட்டு வேறு படத்தை திரையிடுகின்றனர்.எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE