வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, 2 பாகமாக திரைப்படமாக எடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் உட்பட பலர் நடிப்பில் உருவான இரண்டு பாகமும் சூப்பர் ஹிட்டானது. கடந்த ஏப். 28-ம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன் 2ம் பாகம்’ உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்து வருகிறது.
இந்நிலையில், தனது கனவு படத்துக்குத் தோள் கொடுத்த அனைவருக்கும் இயக்குநர் மணிரத்னம் நேற்று முன்தினம் விருந்து கொடுத்துள்ளார். கிண்டி ரேஸ்கோர்ஸில் நடந்த இந்த விருந்தில் கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டனர். டெக்னீஷியன்கள், உதவியாளர்களில் இருந்து அலுவலக வாட்ச்மேன் வரை சுமார் 300 பேர் பங்கேற்றுள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ‘பொன்னியின் செல்வன் படைக்கு நன்றி’ என்ற பேனர் அங்கு வைக்கப்பட்டிருந்தது.