சாலையில் டிராபிக் ஜாம்; பைக் ஓட்டியிடம் லிஃப்ட் கேட்டு சென்ற அமிதாப் பச்சன் - புகைப்படம் வைரல்

By செய்திப்பிரிவு

மும்பை: நடிகர் அமிதாப் பச்சன், படப்பிடிப்புக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது டிராபிக் ஜாம் ஆனதால் சாலையில் பைக்கில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பிலும், பொது நிகழ்வுகளிலும் நேரம் தவறாமையை கடைபிடிப்பதில் நடிகர் அமிதாப் பச்சன் கண்டிப்பானவர் என்று சொல்லப்படுவதுண்டு. அதற்கு உதாரணமாக சமீபத்தில் ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

தனது வீட்டில் இருந்து ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக அமிதாப் பச்சன் காரில் சென்றுள்ளார். அப்போது திடீரென சாலையில் டிராபிக் ஜாம் ஆனதால் அவரது கார் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தன்னால் படப்பிடிப்பு தாமதாவதை உணர்ந்த அமிதாப் தனது காரை விட்டு இருந்து இறங்கி, பைக்கில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவரிடம் தன்னை படப்பிடிப்பு தளத்தில் இறக்கி விட முடியுமா? என்று கேட்டுள்ளார். பைக் ஓட்டி சம்மதிக்கவே அவரது பின்னால் அமர்ந்து படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். இது தொடர்பான போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமிதாப், அந்த பைக் ஓட்டிக்கு நன்றி கூறியுள்ளார்.

“ரைடுக்கு நன்றி நண்பா. நீங்கள் யார் என்று தெரியாது. ஆனாலும் நீங்கள் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வேகமாகவும், தீர்க்க முடியாத டிராபிக் சிக்கல்களை தவிர்த்தும், என்னை கொண்டு வந்து சேர்த்தீர்கள். தொப்பி, ஷார்ட்ஸ், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த உங்களுக்கு நன்றி”

இவ்வாறு அமிதாப் பச்சன் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE