மும்பை: வெளியான 9 நாட்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் இப்படம் ரூ.19 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி’. இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.
இப்படம் தமிழ்நாட்டில் ஒரு நாள் மட்டுமே ஓடியது. மறுநாள் இப்படத்தை திரையிட மல்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் மறுத்து விட்டன. எனினும் வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு 37க்கும் மேற்பட்ட நாடுகளில் மே 12ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த நிலையில் இப்படம் வெளியான 9 நாட்களில் நாடு முழுவதும் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் ரூ.19 கோடி வசூலித்ததன் மூலம் இப்படம் மொத்தம் ரூ.112.97 கோடியை வசூலித்துள்ளது.