‘மார்க் ஆண்டனி’ படத்தில் விஷால் தொடர்பான காட்சிகள் நிறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிகர்கள் விஷால் மற்றும் சுனில் இருவர் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, ‘பகீரா’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்துக்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தில் விஷால் மற்றும் சுனில் இருவர் தொடர்பான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை விஷால், சுனில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விஷால், “மார்க் ஆண்டனி படத்தில் எனக்கும் என் அருமை சகோதரர் சுனிலுக்குமான காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்தன. இது ஒரு அற்புதமான, அழகான பயணமாக இருந்தது. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் படத்தை காட்ட நாங்கள் ஆவலாக இருக்கிறோம். படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். விரைவில் திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது” என்று கூறியுள்ளார். ’மார்க் ஆண்டனி’ படம் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE