துல்கர் சல்மானுடன் இணையும் ‘வாத்தி’ இயக்குநர்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தனுஷ், சம்யுக்தா நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரியின் புதிய படம் ஒன்றில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியான இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி, மொட்டை ராஜேந்திரன், சாரா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.100 கோடி வசூலைக்கடந்தது. கல்வியின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில் வெங்கி அட்லூரி இயக்கவுள்ள புதிய படம் ஒன்றில் துல்கர் சல்மான் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஃபார்ச்சூன் 24 நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இதனை படக்குழு சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE