3 நாட்களில் ரூ.35 கோடியை வசூலித்த ‘தி கேரளா ஸ்டோரி’

By செய்திப்பிரிவு

சுதிப்டோ சென் இயக்கத்தில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இந்தியாவில் 3 நாட்களில் மட்டும் ரூ.35.25 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. ஆதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு விரேஷ் ஸ்ரீவல்சா மற்றும் பிஷக் ஜோதி ஆகிய இருவர் இசையமைத்திருந்தனர். இப்படத்தில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்தன.

இந்தப் படத்துக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனிடையே, நேற்று முதல் தமிழ்நாட்டில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன.

இந்நிலையில், இப்படம் முதல் நாள் மட்டும் ரூ.8 கோடி அளவில் வசூலித்ததாக தகவல் வெளியானது. பல்வேறு எதிர்ப்புகளிடையே படம் இந்தியாவில் முதல் 3 நாட்களில் மட்டும் ரூ.35.25 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஒருநாள் மட்டும் (மே 7) ரூ.16 கோடியை ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE