“ஆரம்பத்தில் விஜய்யை வைத்து படம் எடுக்க யாரும் முன்வரவில்லை” - இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிறுகதை ஒன்றை தழுவி உருவாக்கப்படும் இப்படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி தயாரிக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியவதாவது: “இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தபோது பாரதிராஜாவை நேரில் சந்தித்து உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். ஆனால், அவர் நாம் நண்பர்களாகவே இருப்போம் என்று கூறிவிட்டார்.

அதன் பிறகு இயக்குநராகி பல படங்களை இயக்கினேன். என் மகன் விஜய்யை முதன்முதலில் நடிகராக்க வேண்டி, அவரது போட்டோ ஆல்பத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் பாரதிராஜாவிடம் சென்று வாய்ப்பு கேட்டேன். அப்போதும் மறுத்துவிட்டார். என் வாழ்வில் நான் பாரதிராஜாவிடம் கேட்ட இரண்டு விஷயங்களும் எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு என்னையும், பாரதிராஜாவையும் இணைத்து நடிக்க வைத்திருக்கிறார் தங்கர் பச்சான்.

ஆரம்பத்தில் பெரிய இயக்குநர்கள் யாரும் விஜய்யை வைத்து படம் இயக்க முன்வரவில்லை. அதுவும், ஒருவகையில் நல்லதுதான். அவர் என் கையில் வந்ததால்தான் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக அவர் மாறினார்” என்று எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE