அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி’. இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்ட இந்தப் படத்துக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது. படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை படம் வெளியானது. தமிழகத்தில் சென்னையில் 12 தியேட்டர்களிலும் கோவையில் 3 தியேட்டர்களிலும் இந்தப் படம் வெளியானது.
இந்நிலையில், திரையரங்குகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, படத்தை நேற்று முதல் நிறுத்துவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதை அந்தச் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.