கார் விபத்தில் சிக்கிய பின்னணி பாடகி ரக்சிதா சுரேஷ் - சிறிய காயங்களுடன் தப்பியதாக பதிவு

By செய்திப்பிரிவு

பிரபல பின்னணி பாடகி ரக்சிதா சுரேஷ் மலேசியாவில் கார் விபத்தில் சிக்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ ஆறாவது சீசன் ரன்னராக அறிவிக்கப்பட்டவர் ரக்சிதா சுரேஷ். இவர் தெலுங்கில் இளையராஜா இசையில் வெளியான ‘எவடே சுப்ரமணியம்’ படத்தில் முதன்முதலாக பாடகியாக அறிமுகமானார்.

பின்னர் தமிழில் ’வந்தா ராஜாவதான் வருவேன்’ படத்தில் இடம்பெற்ற பட்டமரங்கள் என்ற பாடலை பாடினார். தொடர்ந்து பல்வேறு திரைப்பட பாடல்கள், ஆல்பம் பாடல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடல் ரக்சிதாவை பிரபலமாக்கியது. ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ பாடலையும் ரக்சிதா பாடியிருந்தார் .

இந்த நிலையில் பாடகி ரக்சிதா மலேசியாவில் தான் கார் விபத்தில் சிக்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்று ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கினேன். மலேசியாவில் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, நான் இருந்த கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி கடும் சேதமடைந்தது. அந்த 10 நொடிகளில் என்னுடைய ஒட்டுமொத்த வாழ்வும் என் கண்முன்னே தோன்றி மறைந்தது. ஏர்பேகுகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவை இல்லையென்றால் நிலைமை மோசமாகியிருக்கும். இன்னும் எனக்கு நடுக்கம் குறையவில்லை. நல்லவேளையாக நான், ஓட்டுநர் மற்றும் முன்சீட்டில் அமர்ந்திருந்த மற்றொரு பயணி ஆகிய மூவரும் சிறிய உள்காயங்கள் மற்றும் வெளிக்காயங்களுடன் தப்பித்தோம். அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE