தியேட்டர்களில் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள் - ‘தி கேரளா ஸ்டோரி’ நாயகி நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்தில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக காட்டப்பட்டுள்ளது. இப்படத்துக்கு எதிராக கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வந்தன. இப்படத்துக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில் இப்படத்தின் நாயகி அடா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தியேட்டர்களில் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி எங்கள் படத்தை குறிப்பிட்டு பேசுகிறார். என்னுடைய நடிப்பை ஆடியன்ஸ் பாராட்டுகிறார்கள். உங்களில் பலரிடமிருந்து ஹவுஸ்ஃபுல் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு மிகப்பெரிய ஓபனிங். இதனை நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. எனக்கான உங்களுடைய கனவுகள் அனைத்தும் நனவாகியுள்ளன.

இப்போதும் சிலர் ’தி கேரளா ஸ்டோரி’யை பிரச்சாரப் படம் என்று சொல்கின்றனர். சில பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் வாக்குமூலத்தை கேட்டபிறகும் கூட அப்படியான சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று வாதிடுகின்றனர். என்னுடைய பணிவான வேண்டுகோள் என்னவென்றால் தயவுசெய்து கூகுளில் ISIS மற்றும் Brides ஆகிய இரண்டு வார்த்தைகளை தேடிப் பாருங்கள். அப்போதாவது எங்கள் திரைப்படம் உண்மை என்று நீங்கள் உணரலாம்.

இவ்வாறு அடா சர்மா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE