‘ஃபர்ஹானா’ இஸ்லாமியர்கள் கொண்டாடும் படமாக இருக்கும் - தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு நம்பிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: இஸ்லாமியர்கள் கொண்டாடும் திரைப்படமாக ‘ஃபர்ஹானா’ இருக்கும் என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தெரிவித்துள்ளார்.

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்த்துள்ள படம் ‘ஃபர்ஹானா’. இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

‘ஃபர்ஹானா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசியதாவது, "நெல்சன் என்ற மனிதருக்காக ஆரம்பிக்கப்பட்ட படம். 3 படங்கள் வரிசையாக எடுக்கலாம் என்று பேசிதான் இப்படத்தை ஆரம்பித்தோம். ஆனால், மூன்று வருடங்களாக ஒரே கதையை தான் எடுத்திருக்கிறோம். அவர் எல்லோரையும் கஷ்டப்படுத்தியாக கூறினார். ஆனால், அவர் அப்படி இருந்ததால் தான் படம் சிறப்பாக வந்திருக்கிறது. ‘மான்ஸ்டர்’ படத்தில் வீடு மட்டுமே செட் போட்டு எடுத்தோம். ஆனால், எலியை உண்மையாகத்தான் வைத்து எடுத்தோம். அதை யாரும் நம்பவில்லை.

‘ஃபர்ஹானா’ மூன்று மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் மதம் சார்ந்து சர்ச்சைக்குரிய விதத்தில் எதுவும் இல்லை. இஸ்லாமியர்கள் பயப்படும் படமாக இல்லாமல் கொண்டாடும் விதமான படமாக இது இருக்கும்" என கூறினார். ‘ஃபர்ஹானா’ திரைப்படம் வரும் மே 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE