இதை விட வேறு என்ன வேண்டும்? - ‘தி கேரளா ஸ்டோரி’ தயாரிப்பாளர் பிரதமருக்கு நன்றி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடிக்கு தயாரிப்பாளர் விபுல் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்தின் டீசரில், கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு கேரளாவில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்னொரு புறம், நேற்று இப்படத்துக்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. வடமாநிலங்களில் இப்படம் நேற்று முதல் நாளில் ரூ.6.5 கோடி வரை வசூல் கிடைத்ததாகவும் இந்தியா முழுவதும் ரூ.10 கோடி வரை வசூல் ஈட்டியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம், இந்திய தேசத்துக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தியுள்ளதாக கூறியிருந்தார். இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் விபுல் ஷா, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

"நாளின் தொடக்கத்தில் இதை விட வேறு என்ன எங்களுக்கு வேண்டும்? கேரள உயர்நீதிமன்றம் ஒரு அழகான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் பிரதமர் மோடி எங்கள் படம் குறித்து பேசியது மட்டுமின்றி, நாங்கள் படம் முழுக்க அடிக்கோடிட்டு காட்ட விரும்பிய விஷயத்தையே அவரும் பேசியுள்ளார். இப்படம் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான படம் மட்டுமே. இது எந்தவொரு சமூகத்தையோ அல்லது மதத்தையோ தவறாக சித்தரிக்கவில்லை. எங்களது இந்த நிலைப்பாட்டை பிரதமரும் நிருபித்திருக்கிறார். எங்களை குறிவைத்த அனைவருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பே பதிலாக அமைந்துள்ளது." இவ்வாறு விபுல் ஷா கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE