“சிலிர்க்க வைக்கும் அனுபவம்” -  ‘பொன்னியின் செல்வன் 2’ பார்த்த அனில் கபூர் புகழாரம்

By செய்திப்பிரிவு

’பொன்னியின் செல்வன் 2’ படக்குழுவுக்கு பாலிவுட் நடிகர் அனில் கபூர் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 28ம் தேதி ‘பொன்னியின் செல்வன் 2’ உலகம் முழுவதும் வெளியானது. கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார்.

முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டாம் பாகம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்த பாலிவுட் நடிகர் அனில் கபூர் இப்படம் குறித்து ட்விட்டரில் பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மணிரத்னத்தில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தை பார்த்தது சிலிர்க்க வைக்கும் அனுபவம். விறுவிறுப்பான கதை, மயக்கும் இசை, வியக்க வைக்கும் பிரம்மாண்டம் ஆகியவை என்னை தொடக்கம் முதலே கட்டிப் போட்டு விட்டன. சீயான் விக்ரமுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். ஐஸ்வர்யா ராய் கடினமான பாத்திரத்தில் அற்புதமாக நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்தை வேறு ஒரு தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. எனது நண்பர் ரவிவர்மனின் ஒளிப்பதிவு தான் படத்தின் ஹைலைட். இந்திய சினிமாவுக்கு உண்மையான ரத்தினத்தை பரிசளித்த மணிரத்னம் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE