“லவ் சீக்வன்ஸில் ஏற்பட்ட விபத்து அது!” - விஜய் ஆண்டனி பகிர்வு

By செய்திப்பிரிவு

“ஐசியூவிலிருந்து கண் முழித்து எழுந்து இரண்டாவது நாள் மருத்துவரிடம் சண்டைப்போட்டு லேப்டாப் வாங்கி வேலை செய்தேன். என்னை பார்க்க வந்தவர்களுக்கு நான் தைரியம் சொன்னேன்” என நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, தயாரித்து, இசையமைத்துள்ள படம் ‘பிச்சைக்காரன் 2’. இப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, “இது நான் எதிர்பார்க்காத ஒன்று. இயக்குநராவேன் என நினைக்கவேயில்லை. இது ஒரு விபத்து தான் என்று கூற வேண்டும். இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளோம். 5 மொழிகளில் படத்தை வெளியிடுகிறேன். இந்தி மொழியில் மட்டும் ஒருவாரம் கழித்து வெளியாகும்.

மலேசியாவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எனக்கு விபத்து ஏற்பட்டது. வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகளில்தான் விபத்து ஏற்படும். ஆனால் எனக்கு லவ் சீக்வன்ஸில் விபத்து ஏற்பட்டுள்ளது. லவ் சாங் ஒன்றில் நாயகியுடன் போட்-டில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது நான் சென்ற போட் கேமராமேனின் போட்-டின் விளிம்பில் மோதி என் மூக்கு, தாடை எல்லாம் உடைந்து நடுக்கடலில் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன். எனக்கு சுயநினைவேயில்லை. மற்றபடி தற்போது நன்றாக இருக்கிறேன். சொல்லப்போனால் தற்போது மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன். மனதளவில் பலமாக இருக்கிறேன். பயப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை. நன்றாக இருக்கிறேன். யாரும் கவலைப்பட வேண்டாம்.

ஐசியூவிலிருந்து கண் முழித்து எழுந்து இரண்டாவது நாள் மருத்துவரிடம் சண்டைப்போட்டு லேப்டாப் வாங்கி வேலை செய்தேன். என்னை பார்க்க வந்தவர்களுக்கு நான் தைரியம் சொன்னேன். என் உடம்பில் நிறைய இடங்களில் ப்ளேட் வைத்துள்ளார்கள். இயக்குநர் சசியிடம் கேட்டேன். ஆனால், அவர் வேறு படத்தில் பிசியாகிவிட்டதால் நானே படத்தை இயக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE