“பழகுவதற்கு இனிமையானவர்; சிறந்த பண்பாளர்” - மனோபாலாவுக்கு விஜயகாந்த் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: "திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த மனோபாலாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது” என்று என்று தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "எனது அன்பு நண்பர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.

மறைந்த மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை, என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நான் நடித்துள்ளேன். அன்பு நண்பர் மனோபாலா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், சிறந்த பண்பாளர்.

திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார். | வாசிக்க > “அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நடிகர்” - மனோபாலாவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE