“தமிழரின் பெருமை போற்றும் படம்... தனித் துணிச்சல் வேண்டும்!” - ‘பொன்னியின் செல்வன் 2’ குறித்து கமல்

By செய்திப்பிரிவு

“சினிமாவுக்கு நல்ல பொற்காலம் தொடங்கியிருப்பதாக நினைக்கின்றேன்” என ‘பொன்னியின் செல்வன் 2’ படம் பார்த்த பின்பு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சென்னை அடையாறில் உள்ள பிரிவியூ திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தைப் பார்த்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய முதல் விருப்பம் ஆசையெல்லாம் நல்ல சினிமாக்களை பார்க்க வேண்டும் என்பதுதான். அத்தகைய ஒரு சினிமாவாக ‘பொன்னியின் செல்வன்’ அமைந்துள்ளது. இதனை நான் ஒரே படமாகத்தான் பார்க்கிறேன். இதை நாம் ஒரு முழு காவியமாகத்தான் எடுத்துகொள்ள வேண்டும்.

மாற்றுக் கருத்துகள் எல்லா படங்களுக்கும் இருக்கும். அந்த மாற்றுகருத்து இதில் இருந்தாலும் கூட மக்கள் இதனை பெரியதாக ஆதரிக்கிறார்கள் என்பதை செய்திகள் மூலம் அறிகிறேன். மெத்த மகிழ்ச்சியை இது அளிக்கிறது.

தமிழ் சினிமாவின் பெருமை; தமிழரின் பெருமையை போற்றும் இத்தகைய படத்தை எடுக்க வேண்டும் என்பதற்கு தனித் துணிச்சல் வேண்டும். அதனை எடுத்து முடித்திருக்கும் முக்கியமான வீரன் மணிரத்னம். அவரை பாராட்ட வேண்டும். அவருக்கு உறுதுணையாக தோள் கொடுத்து, வாள் கொடுத்து உதவியவர்கள் நட்சத்திர பட்டாளப் படை.

இதுபோன்ற அத்தனை நட்சத்திரங்களையும் ஒன்றுகூடி பார்த்து நீண்ட நாளாகிவிட்டது. நல்ல பொற்காலம் துவங்கியிருப்பதாகவே நான் நினைக்கிறேன். இது போற்றப்பட வேண்டிய வெற்றி” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE