'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியது மத்திய தணிக்கை வாரியம்

By செய்திப்பிரிவு

'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இந்ததிரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்குகின்றனர். அவர்களில் ஒருவர் முஸ்லிம் பெண். மற்றவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்படுவதாகவும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்காக சிரியா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் முன்னோட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவை சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்பட்டனர் என்றும் முன்னோட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகிறது. இதற்கு கேரளா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. அத்துடன் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய 10 காட்சிகளையும் தணிக்கை அதிகாரிகள் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனின் பேட்டி இடம்பெறும் ஒரு காட்சி நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் அடுத்த 20 ஆண்டுகளில் கேரளா முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலமாக மாறும் என்று சொல்வது காட்டப்படுகிறது. இந்தக் காட்சியை தணிக்கை வாரியம் நீக்கியுள்ளது. இது தவிர இந்து கடவுள்கள் குறித்த பொருத்தமற்ற வசனங்கள் இடம்பெற்ற சில் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE