‘சூர்யவம்சம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு - நடிகர் சரத்குமார்

By செய்திப்பிரிவு

“சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகம் வர வாய்ப்புள்ளது” என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சரத்குமார், “நான் இப்போது பேசுவது பெரிய பழுவேட்டரையர் பேசுவது போல் உள்ளது என்கிறார்கள், மகிழ்ச்சி. நான் எப்போதும் நல்ல தமிழ் தான் பேசி வருகிறேன். கலை உலகத்தில் இருந்து கொஞ்ச காலம் ஒதுங்கி இருந்தேன். ஆனால் இப்போது தொடர்ந்து படங்கள் நடிக்க ஆரம்பித்துள்ளேன். கலை தான் என் தொழில்.

‘பொன்னியின் செல்வன்’ பட புரமோசனில் நான் கலந்துகொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள். ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார். இப்போது படம் எல்லோரிடத்திலும் கொண்டாடப்படுவது மகிழ்ச்சி. ‘ருத்ரன்’ வில்லன் பாத்திரம் என்றபோது தயங்கினேன். ஆனால் இப்போதைய ரசிகர்கள் வில்லனாக நடிப்பவர்களை அதே போன்று பார்ப்பதில்லை. அந்த கதாப்பாத்திரத்தை எப்படி செய்துள்ளனர் என்றே பார்க்கிறார்கள்.

அதனால் தைரியமாக நடித்தேன். அடி வாங்கும் சாதாரண வில்லனாக நடிக்க மாட்டேன். நான் நாயகனாக நடித்த காலத்தை விட இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும். அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது, விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும். எப்போதும் உங்கள் ஆதரவு எனக்கு இருந்துள்ளது” என்றார். தொடர்ந்து, “சூர்யவம்சம் படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. கதை உறுதியாகும் பட்சத்தில் இப்படத்தை தொடங்குவதற்கான வாய்ப்பிருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE