2 நாட்களில் உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்த ‘பொன்னியின் செல்வன் 2’

By செய்திப்பிரிவு

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படம் 2 நாட்களில் உலக அளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ.30 கோடி முதல் ரூ.32 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில் படம் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE