நடிகர் ஜெயம் ரவி கடந்த சில நாட்களாக ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்தில் வருகிறார். இந்தத் தோற்றம் எதற்காக என்பது பற்றி அவர் கூறியதாவது:
‘பொன்னியின் செல்வன் 2’ ம் பாகத்துக்குச் சிறப்பான வரவேற்புகிடைத்துள்ளது. என் நடிப்புக்கும் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. அடுத்தும் இது போன்ற ‘மல்டி ஸ்டார்’ படங்களில் நடிக்கவாய்ப்பிருக்கிறதா? என்று கேட்கிறார்கள். யார் இயக்கப் போகிறார்கள் என்பது முக்கியம். மணிரத்னம் போன்ற இயக்குநர் என்றால் அது சாத்தியமாக இருக்கும்.
நான் படம் இயக்குவது பற்றி கேட்கிறார்கள். இயக்குநர் மணிரத்னத்திடம் அவ்வப்போது ‘ஒன்லைனர்’ சொல்வேன். அதைக் கேட்ட அவர், ‘நீ எழுதலாம்’ என்றார். அவர் சொன்ன பிறகு என் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. நடிகர் கார்த்தியிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறேன். நான் நடித்துள்ள ‘இறைவன்’ படம் முடிந்துவிட்டது. அடுத்து ராஜேஷ் எம். இயக்கும் படத்தின் 80% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்போது ‘சைரன்’ படத்தில் நடித்து வருகிறேன். அதற்காகத்தான் இந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக். அதன் திரைக்கதை புதுவிதமாக இருக்கும். அடுத்து புதிய இயக்குநர் இயக்கும் படத்தில் நடிக்கிறேன். அது கொஞ்சம் ஃபேன்டஸி படம். இவ்வாறு ஜெயம் ரவி சொன்னார்