“இந்தs சூழல் ஒரு கல்லூரியின் ஃபேர்வெல் போல இருக்கிறது. நாளை படம் வெளியாகிறது. படம் காலத்திற்கும் நிலைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து மணிரத்னம் படத்தை இயக்கியுள்ளார்” என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் நாளை (ஏப்ரல் 28) வெளியாகிறது. இந்நிலையில் சென்னையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கார்த்தி, “காலேஜ் ஃபேர்வெல் போல இருக்கிறது. எத்தனையோ பேர் செய்ய நினைத்த கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தது மகிழ்ச்சி. ‘பொன்னியின் செல்வன்’ பயணம் முடியப்போகிறது.
கல்லூரிக் கால பயணம் போல இருந்தது. மற்ற மாநிலங்களுங்களில் செல்லும்போது தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தியது பெருமையாக இருந்தது. மணிரத்னத்தின் கனவுப் படம் இது. ஆனால் கேட்டால் அவர் இது கனவுப் படம் என்பதையே சொல்லமாட்டார். ராஜ ராஜ சோழனை காட்சிப்படுத்த அவர் எடுத்த மெனக்கெடலை நேரில் பாத்திருக்கிறேன். காலத்திற்கும் நிற்கவேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். இந்தப் படத்தை அவர் ரசித்து இயக்கினார். இந்தப் படத்தில் நான் ஒருபகுதியாக இருந்தேன் என்பதில் மகிழ்ச்சி” என்றார்.
ஜெயம் ரவி பேசுகையில், “படத்தின் மீது எங்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. 150 நாட்கள் இரண்டு பாகங்களை எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அது மணிரத்னத்தால் நிகழ்ந்தது. கடுமையாக உழைத்துள்ளோம். படத்தை கடந்த உணர்வைக் கொடுத்தது ‘பொன்னியின் செல்வன்’. கார்த்தி படம் திரைரங்குகளில் வரும்போது விசில் அடித்து பார்க்க வேண்டும் ஆசைப்படுபவர்களில் நானும் ஒருவன். அவர் என்னுடைய ‘சோல்மேட்’. படம் நிச்சயம் பெரும் வெற்றியடையும்” என்றார்.
» மலையாள சினிமா ‘மாஸ்’ பாதையில் பிரித்விராஜ் தான் கிங்... ஏன்? - ஓர் அலசல்
» “நான் சீரியஸான கதாபாத்திரங்களில்தான் நடிப்பேன் என நினைக்கிறார்கள்; அப்படியில்லை!” - அதிதி பாலன்
த்ரிஷா பேசுகையில், “சென்னையில் தொடங்கி சென்னையில் புரமோஷனை முடிக்கிறோம். படத்தின் மீது பயங்கரமான எதிர்பார்ப்பு இருக்கிறது. மணிரத்னத்தின் இயக்கத்தில் வேலை பார்த்தது பெருமையாக கருதுகிறேன். இந்தக் குழுவுடன் பயணிக்கும்போது ஒரு பெண்ணாக மிகவும் கம்ஃபர்டபிளாக உணர்ந்தேன். எனக்கு பெரும்பாலும் பெஸ்ட் ஃப்ரண்ட்ஸ் இருந்ததில்லை. தற்போது அந்த குறை தீர்ந்துள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவியுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி” என்றார்.