சென்னை: நடிகர் விஷால் மற்றும் மார்க் ஆண்டனி படக்குழுவினர் தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகரான விஜய்யை சந்தித்துள்ளனர். இதனை விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மார்க் ஆண்டனி டீசர் தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாத ஒரு பாத்திரத்தின் பெயர் என்றால் அது ‘மார்க் ஆண்டனி’ தான். பாட்ஷா படத்தில் ரகுவரன் அந்த பாத்திரத்தில் வில்லனாக நடித்திருப்பார். அந்த பெயரை தலைப்பாக கொண்ட படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இதில் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதன் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய்யை, விஷால் தலைமையிலான மார்க் ஆண்டனி படக்குழு சந்தித்துள்ளது. “எனது சகோதரர் மற்றும் ஹீரோவை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்கள் படத்தின் டீசரை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் ரசிகன் என சொல்லிக்கொள்வதில் என்றென்றும் மகிழ்ச்சி” என விஷால் ட்வீட் செய்துள்ளார். அதோடு விஜய் உடனான படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக தகவல்.
» திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் சர். பிட்டி. தியாகராயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
» அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது - டெல்லியில் இபிஎஸ் பேட்டி