செக் மோசடி வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுவதாக நடிகர் விமலுக்கு ரூ.300 அபராதம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: செக் மோசடி வழக்கில் இழுத்தடிக்கும் நோக்கில் செயல்படுவதாக நடிகர் விமலுக்கு 300 ரூபாய் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விமல் நடித்த திரைப்படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தை தயாரிக்க நடிகர் விமல், கோபி என்பவரிடமிருந்து 4.5 கோடி கடனாக பெற்றுள்ளார். படம் வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார். இந்த காசோலையை கோபி வங்கியில் செலுத்திய போது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதையடுத்து 4.5 கோடி செக் மோசடி வழக்கை நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளையும் விசாரிக்கும் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக நடிகர் விமல் ஏற்கெனவே நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கின் சாட்சிகளை விசாரிக்க விமல் தரப்பில் முன்வரவில்லை. இதையடுத்து முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்வதை முடித்து வைத்து, வழக்கு விசாரணையை நீதிபதி தாரணி தொடங்கினார்.

இதன்பின்னர் முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று விமல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது முதல் சாட்சியை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற விமல் மனுவை ஏற்றுக் கொள்வதாகவும், அதே நேரம் வழக்கு இழுத்தடிக்க வேண்டும் என்று நோக்கத்தில் செயல்பட்ட நடிகர் விமலுக்கு ரூபாய் 300 வழக்கு செலவு (அபராதம்) விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE