நடிகர் அஜித் செய்த உதவி: வைரலாகும் பதிவு!

By செய்திப்பிரிவு

நடிகர் அஜித், அடுத்து மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். லைகா தயாரிக்கும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதற்கிடையே கைக்குழந்தையுடன் லண்டனில் இருந்து வந்த பெண்ணுக்கு அஜித் செய்த உதவி வைரலாகி வருகிறது. அந்தப் பெண்ணின் கணவர் இதுபற்றி சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது.

என் மனைவி, கிளாஸ்கோவில் இருந்து தனது 10 மாத குழந்தையுடன் தனியாகச் சென்னை வந்தார். லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் நடிகர் அஜித்தைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கேபின் சூட்கேஸ் மற்றும் குழந்தை பையுடன் வந்திருந்தார். அஜித் அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது மட்டுமின்றி, என் மனைவி தனியாக வந்திருப்பதைப் புரிந்துகொண்டு, அவள் பையையும் எடுத்துச் சென்று உதவினார். என் மனைவி மறுத்தும், “பரவாயில்லை. எனக்கும் 2 குழந்தைகள் இருக்காங்க. அதனால, உணரமுடியும்” என்று சொல்லிவிட்டு, என் மனைவியின் இருக்கைக்கு மேலே அந்த சூட்கேஸ் வைக்கப்பட்டதை உறுதிப்படுத்திவிட்டுச் சென்றார். மிகப்பெரிய ஓரு ஆளுமை இப்படி செய்தது வியக்க வைத்தது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு வேகமாகப் பரவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE