‘வாத்தியார்’ நான் கிடையாது, வெற்றிமாறன் தான்: விஜய் சேதுபதி பேச்சு

By செய்திப்பிரிவு

“இங்கு வாத்தியார் என்பது விஜய் சேதுபதி கிடையாது, வெற்றிமாறன் தான். நான் ஒரு களிமண் போலத்தான். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்வேன். வெற்றி சொல்வதை செய்வேன்” என நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

‘விடுதலை பாகம் 1’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “விடுதலை படம் ரிலீஸ் அன்றைக்கு காலையில வெற்றி எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘சேது, எல்லா டார்ச்சரையும் பொறுத்துகிட்டு நடிச்சதுக்கு ரொம்ப நன்றி. படம் எல்லாருக்கும் பிடிச்சிருக்குனு செய்தி வந்துகிட்டே இருக்கு’ன்னு சொன்னார். இப்படி ஒரு ஃபோன்கால், கடைசியா எப்போ வந்துச்சுனு எனக்கு நினைவில்லை.

இந்தப் படத்தோட எல்லா பகுதியிலுமே வெற்றிதான் நிறைஞ்சிருக்கார். ‘எந்தப் படத்தை வேண்டுமானாலும் ஒருவர் எடுக்கலாம், எந்தக் கருத்தை வேண்டுமானாலும் மக்களுக்கு சொல்லலாம். ஆனால், பணம் போடுகிறவர்களுக்கு, அந்தப் பணம் திருப்பி கிடைக்கணும்’ என்ற மிகப்பெரிய பொறுப்போடுதான் வெற்றி செயல்படுவார்.

நான் ஒரு களிமண் போலதான் அங்கு போவேன். அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்வேன். இந்தப் படத்தின் பெருவெடிப்பு அவருடைய சிந்தனையில் இருந்துதான் தொடங்கியது. எப்போதுமே யானைகள் பணிவாக இருக்கும்போது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதன்போலதான், அவருடைய அறிவும், போக்கும், செயல்பாடும் பிரம்மாண்டமாக இருக்கும். அவருடைய கிரகிப்புத்தன்மை எப்போதும் என்னை ஆச்சரியப்பட வைக்கும். நல்ல வேளை நான் பெண்ணாக இல்லை. அப்படியிருந்தால் வெற்றிமாறனை காதலித்திருப்பேன்.

உணவு சமைக்கும்போதே அதை பரிமாறி சுவைத்துப் பார்க்க சொல்லும் தைரியம் எத்தனை பேரிடம் இருக்கும் எனத் தெரியவில்லை. அப்படி படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே என்னிடம் கேட்டார். அப்படி ஒரு அற்புதமான இயக்குநர் அவர். கதை தொடர்பாக என்னிடம் பல கேள்விகள் இருந்தன. அதை அவரிடம் கேட்டு புரிந்து கொண்டு வாத்தியாரை கொடுத்திருக்கிறேன். இங்கு வாத்தியார் என்பது விஜய்சேதுபதி கிடையாது, வெற்றிமாறன்தான். நகைச்சுவை நடிகராக இருந்து, கதையின் நாயகனாக வெற்றி மீது நம்பிக்கை வைத்து நகர்ந்து வந்திருக்கும் சூரிக்கும் பாராட்டுக்கள்.

ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன், ஒருமுறை சூரியிடம் ‘உனக்கு நம்ம ஊர் முகம் இருக்கு… இப்படியே தேங்கிடாத. உனக்குள்ள நிறைய இருக்கு. அதை வெளிகாட்டிட்டே இரு’னு சொன்னேன். இனி சூரி அடுத்தடுத்து பண்ணப்போற விஷயங்கள்ல ரொம்ப கவனமா இருக்கணும். ஏன்னா இப்போ இந்த வெற்றியை வச்சு, ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்வாங்க. அதுல எது தேவை, யார் சொல்றாங்க, என்ன எடுத்துகலாம், எது வேணாம்னெல்லாம் கவனமா இருக்கணும். இந்த வெற்றி, சூரிக்கானது. சூரி… இந்த வெற்றி, வெற்றி சார் உனக்காக கொடுத்தது” என்றார் விஜய் சேதுபதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE