'பொன்னியின் செல்வன் 1' படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம்: பார்த்திபன் விருப்பத்திற்கு பதிலளித்த மணிரத்னம்!

By செய்திப்பிரிவு

சென்னை: ‘பொன்னியின் செல்வன் 1’ படத்தை மீண்டும் வெளியிடலாம் என இயக்குநர் மணிரத்னம் வசம் கேட்டுள்ளார் நடிகர் பார்த்திபன். அதற்கு பதில் அளித்துள்ளார் மணிரத்னம். வரும் 28-ம் தேதி ‘பொன்னியின் செல்வன் 2’ வெளியாக உள்ள நிலையில் அவர் என்ன சொல்லி உள்ளார் என்பதை பார்ப்போம்.

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரூ.500 கோடியை வசூலித்து சாதனை படைத்தது. இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி அன்று வெளியாகிறது.

கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் முதல் பாடலான ‘அக நக’ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. அண்மையில் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வெளியானது.

இந்நிலையில், முதல் பாகத்தை மீண்டும் வெளியிடலாம் என மணிரத்னத்திடம் கேட்டுள்ளார் பார்த்திபன். அது தொடர்பாக மணிரத்னம் தனக்கு தெரிவித்த பதிலை பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார்.

“மணி சாரிடம் ஒரு விருப்பம் தெரிவித்தேன். PS2-வுடன் PS1-ஐயும் ஒரு சில இடங்களில் வெளியிட்டால் தொடர்ச்சியாகப் பார்க்க வசதியாக இருக்குமென. அவர் பதில்..” என ட்வீட் செய்துள்ளார். அதில் இரண்டு படங்களை பார்த்திபன் சேர்த்துள்ளார். அதில் ஒன்று மணிரத்னம் ரிப்ளை கொடுத்த ஸ்க்ரீன்ஷாட். “சில திரையரங்கில் பொன்னியின் செல்வன் 1 படத்தை ஏப்ரல் 21-ம் தேதி வெளியிடும் திட்டம் உள்ளது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரசிகர்களும் தங்களது யோசனைகளை பார்த்திபனின் ட்வீட்டில் பதில் ட்வீட் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE