பாபா பட தோல்வியால் தென்னிந்திய சினிமாவில் என் கரியர் முடிந்தது- மனிஷா கொய்ராலா

By செய்திப்பிரிவு

கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘பாபா’. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக ‘பாபா’ படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, ரியாஸ்கான், எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

சில நாட்கள் முன் ‘பாபா’ படம் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாள் ரூ.1.4 கோடியை வசூலித்தது.

இந்நிலையில் இப்படத்தின் நாயகி மனிஷா கொய்ராலா சமீபத்தில் இப்படம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், "தமிழில் நான் கடைசியாக நடித்த மிகப் பெரிய படம் பாபா. அந்த சமயத்தில் இந்தப் படம்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் தோல்வியைச் சந்தித்தது. அந்த தோல்வி தென்னிந்திய சினிமாவில் எனது கரியரை பாதிக்கும் என்று நினைத்தேன்.

அதே போலவே தென்னிந்திய சினிமாவில் என்னுடைய கரியர் அந்தப் படத்தோடு முடிந்தது. பாபாவுக்கு முன்பு சில தென்னிந்திய சினிமா பட வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் பாபா பட தோல்விக்கு பிறகு எனக்கு வாய்ப்பு வரவில்லை. அதேநேரம், 20 ஆண்டுகளுக்கு பிறகு பாபா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றி பெற்றதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பாபா படத்தையும் பார்த்து ரசித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE