பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா ஓரம்கட்டப்பட்டதற்கு கரண் ஜோஹர்தான் காரணம் என கூறப்படும் நிலையில், அவரை கட்டியணைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“இந்தி திரைத் துறையில் ஓரம் கட்டப்பட்டேன். யாரும் வாய்ப்புக் கொடுக்க முன் வரவில்லை. இதனால் இந்தி சினிமாவில் இருந்து விலகிவிட்டேன். அங்கு நடக்கும் அரசியல் விளையாட்டு எனக்குப் பிடிக்கவில்லை, அந்த நேரத்தில்தான் ஹாலிவுட் வாய்ப்பு வந்தது” என அண்மையில் பிரியங்கா சோப்ரா பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை கங்கனா ரனாவத், “தன்னைத் தானே செதுக்கிய ஒரு நடிகையை இந்தியாவை விட்டு விரட்டிவிட்டார்கள். கரண் ஜோஹர்தான் அவருக்கு தடை விதித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று கூறியிருந்தது கூடுதல் சர்ச்சையானது.
இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸுடன் நீதா முகேஷ் அம்பானியின் கலாச்சார மையத்தின் திறப்பு விழாவுக்காக அமெரிக்காவிலிருந்து மும்பை வந்திருந்தார். இந்த விழாவில் பாலிவுட் திரையுலகமே கலந்துகொண்டது. நடிகர் ரஜினிகாந்தும், மகள் சௌந்தர்யாவும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹரை பிரியங்கா சோப்ரா கட்டியணைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது. மேலும், விழாவில் இருவரும் இணைந்து சிரித்து பேசுகின்றனர்.
பாலிவுட்டில் கரண் ஜோஹரால் பிரியங்கா சோப்ரா ஓரம் கட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில், வெளியான இந்த வீடியோ கவனம் பெற்றுள்ளது. பிரியங்கா சோப்ரா நடிப்பில் ‘லவ் அகைன்’ (Love Again) என்ற ஹாலிவுட் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
» கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட நடிகர் சூர்யா குடும்பத்தினர்
» மீண்டும் திரையில் மலையாள நடிகர் சீனிவாசன் - ‘குருக்கன்’ முதல் பார்வை வெளியீடு