மீண்டும் திரையில் மலையாள நடிகர் சீனிவாசன் - ‘குருக்கன்’ முதல் பார்வை வெளியீடு

By செய்திப்பிரிவு

உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று மீண்ட மலையாள நடிகர் சீனிவாசன் ‘குருக்கன்’ படம் மூலமாக மீண்டும் திரையில் தோன்றவுள்ளார். படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

மலையாள சினிமா உலகத்தில் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவர் சீனிவாசன். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டவர். இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். மலையாள சினிமாவின் சிறந்த திரைக்கதை எழுத்தாளரான சீனிவாசன், கேரளாவின் சமூக மற்றும் அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதையால் அறியப்பட்டவர். கேரளாவின் மாநில விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர், 1998-ம் ஆண்டு வெளியான 'சிந்தாவிஷ்டாய ஸ்யாமலா' ( Chinthavishtayaya Shyamala) படத்திற்காக தேசிய விருது பெற்றார்.

இதனிடையே, இதய பிரச்சினை காரணமாக அண்மையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தற்போது 'குருக்கன்' (Kurukkan) மலையாள படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இதில் அவரது மகன் வினீத் சீனிவாசனும் நடித்துள்ளார். வினீத்தும் அவரது தந்தையும் கடைசியாக 2018 ஆம் ஆண்டு எம்.மோகனன் இயக்கத்தில் வெளியான 'அரவிந்தன்டே அதீதிகள்' (Aravindante Athidhikal) படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ‘குருக்கன்’ படத்தை ஜெயலால் திவாகரன் இயக்குகிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஷைன் டாம் சாக்கோ நடிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE