நடிகர் செந்திலுக்கு 70-வது பிறந்தநாள் - பீமரத சாந்தி விழா

By செய்திப்பிரிவு

நகைச்சுவை நடிகர் செந்திலின் 70-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பீமரத சாந்தி விழா இன்று நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் அருகே திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்நிலையில், பல்வேறு சிறப்புகளை உடைய இந்த கோயிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு தனது 70-வது வயதை முன்னிட்டு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெற்றது. நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதிபிரபு மற்றும் குடும்பத்தினர் இதில் பங்கேற்றனர். கோயில் மண்டபத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு பீமரத சாந்தி சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜை நடைபெற்றது. நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்விக்கு கலச அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. நடிகர் செந்திலுடன் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE