பிரபல போஜ்புரி நடிகை தற்கொலை - ரசிகர்கள் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

பிரபல போஜ்புரி நடிகை ஆகன்ஷா துபே (25). போஜ்புரி சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர், ‘நாயக்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக, கடந்த 23ம் தேதி வாரணாசி வந்தார்.

அவருடன் மேக்கப் மேன் ராகுல், சிகை அலைங்கார கலைஞர் ரேகாமவுரியா, சிறுவன் சஞ்சய் ஆகியோர் வந்திருந்தனர். நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் இரவு, பிறந்த நாள் விழா ஒன்றில் கலந்துகொள்ள சென்றார்.

பின்னர், 1.55 மணிக்கு அறைக்குத் திரும்பினார். நேற்று காலை மேக்கப் மேன் அவரை போனில் அழைத்தார். பதில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்த அவர், ஓட்டல் நிர்வாகியிடம் தெரிவித்தார்.

அவர் வேறொரு சாவி மூலம்அறைக் கதவைத் திறந்து பார்த்தபோது, மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

நடிகை ஆகன்ஷா, தனது சக நடிகர் சமர் சிங்கை காதலிப்பதாகக் காதலர் தினத்தன்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் நடிகையின் திடீர் மறைவு, போஜ்புரி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE