‘‘லியோ’ படம் குறித்து லோகேஷ் கனகராஜ் எதுவும் சொல்லக்கூடாது என தெரிவித்து இருக்கிறார். ஒரு விஷயம் நான் சொல்ல முடியும். படம் ரொம்ப அற்புதமாக வந்திருக்கிறது” என கவுதம் வாசுதேவ் மேனன் பேசியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம், ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.
கடந்த ஒரு மாதமாக காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தீவிரமாக நடைபெற்று வந்த இந்தப் படப்பிடிப்பில் அண்மையில் சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகள் நிறைவடைந்தன. இதனையடுத்து தற்போது படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் முடிந்துள்ளது.
இந்த நிலையில், காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய கவுதம் மேனன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில், ‘லியோ’ படம் குறித்து அங்கிருந்து ரசிகர்கள் அப்டேட் கேட்க, கெளதம் மேனன் அதுபற்றி கூறுகையில், ‘லியோ’ படம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அதுபற்றி எதுவும் சொல்லக்கூடாது என லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருக்கிறார். ஆனால், ஒரு விஷயம் நான் சொல்ல முடியும். படம் ரொம்ப அற்புதமாக வந்திருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். விரைவில் சென்னையில் இதன் படப்பிடிப்புத் தொடங்க இருக்கிறது. விஜய்யுடன் பணியாற்றியது சிறந்த அனுபவம்” என்றார்.